சென்னை,
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடை வெயிலில் கவனமாக இருங்கள், முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். கோடை வெயில் தாக்கத்தால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். வறட்சியான சிவந்த சருமம், உடல் வெப்ப நிலை 100 டிகிரிக்கு மேல் உயருதல், குமட்டல் மற்றும் வாந்தி, கடுமையான தலைவலி, சோர்வு மற்றும் கால் பிடிப்பு, மூச்சு திணறல், நெஞ்சு படபடப்பு, தலைசுற்றல், மயக்கம், பதற்றம் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.
நீங்களோ, அருகில் உள்ளவரோ அசாதாரணமாக உணர்ந்தால் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒய்வெடுக்க அருகில் உள்ள குளிர்ச்சியான பகுதிக்கு நகர வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். கால் சதை பிடிப்பு 1 மணி நேரத்துக்கு மேல் நீடித்தால், மயக்க நிலை, உடல் வெப்பநிலை உயர்வு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரை அணுகலாம் அல்லது 108 அவசர சிகிச்சை வாகனத்தை அழைக்கலாம்.
வெயில் நேரத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நேரிடையாக நம் மீது சூரிய ஒளிபடுவதை தவிர்க்க வேண்டும். குடைகள், தொப்பிகள் பயன்படுத்தலாம். நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். நண்பகலில் கடுமையான பணிகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மதிய நேரத்தில் நிறுத்தப்படும் கார், வாகனங்களில் குழந்தை கள் மற்றும் செல்லப்பிராணிகளை தனியாக விட்டுச் செல்லக்கூடாது. செயற்கை குளிர்பானங்கள், காபி, டீ, மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.