ai image 
தமிழக செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு

5, 8, 9 மற்றும் 10 உள்ளிட்ட முக்கிய நுழைவு வாயில்கள் மூடப்பட்டு இருந்துள்ளன.

சென்னை

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்தில் நுழைவு வாயில்கள் திறக்கப்படாமல், நூற்றுக்கணக்கான பயணிகள் பரிதவித்த சம்பவம் ஏற்பட்டு உள்ளது.

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் 12 நுழைவு வாயில்கள் உள்ளன. அவற்றில் 10 வாயில்களில், இருபுறமும் பயணிகள் உள்ளே செல்ல முடியும். இந்த நிலையில், 5, 8, 9 மற்றும் 10 உள்ளிட்ட முக்கிய நுழைவு வாயில்கள் மூடப்பட்டு இருந்துள்ளன.

இதனால், இன்று அதிகாலை 5 மணி முதல் முற்பகல் 11 மணிவரை பயணிகள் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். விமானம் புறப்படுவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்பு விமான முனையத்திற்குள் செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

நீண்ட வரிசை

ஆனால், குறைந்த அளவிலான நுழைவு வாயில்களே திறக்கப்பட்டு இருந்தன. இதனால், நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர். விமான முனைய கட்டிடத்திற்குள் நுழைவதற்கே ஒரு மணிநேரம் வரிசையில் நிற்க வேண்டி இருந்தது என பயணிகள் பலர் வேதனை தெரிவித்தனர்.

இ-விசா

இதனால், கடும் நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு சோதனைகளை முடித்து கொண்டு, உள்ளே செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான பயணிகள் பரிதவித்தனர். அதிலும், இ-விசா வைத்திருப்பவர்கள் கூடுதல் சோதனைகளை முடித்து கொண்டு செல்வதற்கு முன்பு விமானம் கிளம்பி விடுமோ என்ற அச்சத்திலும், மனஅழுத்தத்திலும் இருந்தனர்.

இதனால் லண்டன், துபாய், சிங்கப்பூர், மியான்மர் மற்றும் தோஹா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.