நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
நிதிநிறுவன மோசடி
திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. 9 பேரால் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் திருச்சி, தஞ்சை உள்பட 10 இடங்களில் செயல்பட்டது. அதிக வட்டி தருவதாக இந்த நிறுவனத்தினர் ஆசை வார்த்தை கூறியதை நம்பி ஏராளமானோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.
இந்தநிலையில், பணத்தை திரும்ப கேட்ட வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 50-க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
கணவன்-மனைவி கைது
அதன்பேரில் தஞ்சை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேரை கடந்த 5-ந் தேதி கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, தஞ்சை முனிசிபல் காலனி 8-ம் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (வயது43), இவரது மனைவி சுகந்தாதேவி (35) ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.