தமிழக செய்திகள்

சென்னையில் பெண் போலீசை கத்தியால் குத்திய கணவர் கைது

சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வரும் ஒரு மகளிர் போலீசின் கணவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

சென்னை,

சென்னை அயனாவரம் பி.இ.கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா (வயது 30). இவர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன்(34). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.

புருஷோத்தமன் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம்போல் கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த புருஷோத்தமன், வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் சத்யாவின் இடது கையில் குத்தினார்.

இதில் காயமடைந்த சத்யா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்தனர்.