தமிழக செய்திகள்

கணவரின் கண்ணீர் அஞ்சலி ‘வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்’.. ஷாக் ஆன மனைவி.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

கணவர் தனது 'வாட்ஸ் அப் ஸ்டேட்டசில்' தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தன்னுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பதிவிட்டுள்ளார்.

திருவாரூர்,

கணவரின் கண்ணீர் அஞ்சலி பதிவை பார்த்த பெண் அவர் இறந்து விட் டதாக நினைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கருத்து வேறுபாடு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கரும்பியூரைச் சேர்ந்தவர் பிரவீன்(வயது 31). இவருடைய மனைவி காயத்ரி (24). இவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர்.

பிரவீன், நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்தது. இதில் மனைவியிடம் கோபித்துக்கொண்டு பிரவீன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

மேட்டுப்பாளையம் மைலி அம்மன் கோவில் பகுதிக்கு சென்ற பிரவீன், அங்கு எலிமருந்தை (விஷம்) தின்றார். மேலும் தனது 'வாட்ஸ் அப் ஸ்டேட்டசில்' தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தன்னுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த காயத்ரி அதிர்ச்சியில் உறைந்தார். தனது கணவர் இறந்து விட்டதாக நினைத்து வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எலி மருந்து

இதனிடையே எலி மருந்தை தின்று மயங்கி கிடந்த பிரவீனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தகராறு காரணமாக தான் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை கணவர், வாட்ஸ்அப்பில் பதிவிட்ட நிலையில் இதைப்பார்த்து மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.