தமிழக செய்திகள்

சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன் - பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி ஆட்சி அமைந்தால் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை

திமுகவுடன் கூட்டணி அமைந்த நிலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிரேமலதா விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிகவினருடன் உறுதிமொழி ஏற்றதுடன், மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;-

திமுக உடன் கூட்டணி என்பது ஒட்டுமொத்த தேமுதிக தொண்டர்களின் விருப்பம். திமுகவோடு கூட்டணி முதல் முறை என்றாலும், விஜயகாந்த்தும், கருணாநிதியும் பல ஆண்டுகளாக நட்பில் இருந்தவர்கள். எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர். பல ஆண்டுகளாக அவர்கள் குடும்பமும் எங்கள் குடும்பமும் நெருக்கமாக பழகியவர்கள்.

தற்போது விஜயகாந்த்தும் இல்லை, கருணாநிதியும் இலை. அவர்கள் ஆசியோடு கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளோம். தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஸ்டாலின் அறிவிப்பார். 2026 தேர்தலில் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும். 200க்கும் அதிக தொகுதிகள் வெல்லும்.

கூட்டணி ஆட்சி அமைந்தால் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது. அதில் நான் உறுதியாக உள்ளேன். கூட்டணி என்பது தேர்தலுக்கானது. அதேபோல் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது நடக்கும் என நம்புகிறேன். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.