தமிழக செய்திகள்

காவிரி விவகாரம்: தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க நான் தயாராக இருக்கிறேன்; முதல்-அமைச்சர் விஜய்

காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யும் எண்ணம் இல்லை என முதல்-அமைச்சர் விஜய் கூறினார்.

சென்னை,

தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்தநிலையில், தவெக அரசு அமைந்த பிறகு மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு இதுவரை இல்லாத வேகத்தில் செயல்படுகிறது.

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கின்றன. ஆனால், இங்கே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட தமிழ்நாடு அரசு மறுக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளிக்கும் வகையில், சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றியதாவது:-

காவிரி நமக்கு உயிர் ஆதாரம்; அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை.மேகதாது அணை கட்டும் விஷயத்தில் தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கோரிக்கை வைத்தது நான்தான்.

பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை பிரதமருக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம். மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் சேர்ந்ததுதான் தீர்மானம் நிறைவேற்றினோம்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதிலுக்குபின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினேன். கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்பட்டபோது 1969-ல் இதே பேரவையில் விவாதங்கள் நடந்தன.

காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கோரிக்கை வைத்தது நான்தான். .காவிரி விவகாரத்தை தீர்ப்பதற்கான ஒரே எண்ணத்துக்காகவே பெங்களூரு செல்ல முடிவெடுத்தேன். பெங்களூரு சென்று கர்நாடக முதல்-மந்திரியுடன் பேசி பார்ப்போமே என நினைத்துதான் முடிவெடுத்தேன்.பகை நாடுகளே பேசி தீர்க்கின்றன.

பக்கத்து மாநிலத்துடன் பேசி பார்க்கலாம் என்றுதான் நினைத்தேன். பெங்களூரு சென்று அவமானம் நடந்தால் என்னாகும் என கேட்டார்கள். மக்களுக்காக அதையும் தாங்க தயார் என்றார்.