தமிழக செய்திகள்

திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் - மு.க.ஸ்டாலின்

திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பட்டது. சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு வீசியும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து சிலை அவமதிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் மக்களிடம் இருந்து புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

திருச்சி - இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல; தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாக நினைத்து அச்செயல் செய்பவர்கள் தங்களைத் தாங்களே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்! என்று தெரிவித்துள்ளார்.