தமிழக செய்திகள்

ஜனநாயகன் ரிலீஸ் கதை எல்லாம் எனக்கு தெரியாது: துரைமுருகன்

அம்மா உணவகம் பெயர் மாற்றாமல் இருந்தது என்று துரைமுருகன் கூறினார்.

வேலூர்,

காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காலை உணவு திட்டத்திற்கு முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம் என்றுதான் பெயர் வைத்திருந்தார் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். அதை விரிவுப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். ஆகையால் அந்த திட்டம் அந்த இரண்டு பேருக்கு மட்டும்தான் பொருந்தும்.

இது முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் என்று தான் சொன்னார்கள். மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டம் என சொல்லவில்லை. ஆனால் ஏன் இப்படி மிரண்டு பெயர் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் பெயர்களை எதுவும் மாற்றவில்லை. உதாரணத்திற்கு அம்மா உணவகம் பெயர் மாற்றாமல் இருந்தது. அவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டோம். அரசியலில் இருப்பவர்களுக்கு பெருந் தன்மை தேவை. அது இவர்களிடம் இல்லை என நிரூபித்து இருக்கிறார்கள்.

தி.மு.க. அரசு கொண்டுவந்த பல திட்டங்களின் பெயரை தொடர்ந்து மாற்றுகின்றனர். அவர்களால் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த முடியவில்லை. வேறு என்ன செய்வது என்று இருக்கும் திட்டங்களின் பெயரையாவது மாற்றலாம் என மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு பெருமை தரக்கூடியது அல்ல. விமர்சனங்களை முன் வைக்கும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றனர். சில நேரங்களில் இப்படி பேசினால் அதனை புறம்தள்ள வேண்டும்.

சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தாமல் புது திட்டங்களை அறிவித்து அதில் கவனம் செலுத்த வேண்டும். அது போன்று எதுவும் இந்த ஆட்சியில் இல்லை. ஜனநாயகன் ரிலீஸ் கதை எல்லாம் எனக்கு தெரியாது. பஸ்களில் பெயர் மாற்றம், வண்ணம் மாற்றம் செய்கிறார்கள். இதெல்லாம் அவர்களுக்கு பெருமை தரும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு சிறுமை தான் தரும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT