சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விஜய்யின் மனைவி சங்கீதா கடந்த டிசம்பர் மாதம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருந்தார். இன்று அது வெளியில் வந்துள்ளது. நான் எப்போதும் சொல்வது இதுதான் மூன்று பேருக்கு இடையேயான பிரச்சினையாகத்தான் இதை பார்க்கிறேன்: விஜய், அவரது மனைவி, நீதிமன்றம் இந்த மூவருக்கும் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே இதை நான் பார்க்கிறேன். அதுவும் ஒரு தனிப்பட்ட மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கை விஷயமாகவே பார்க்கிறேன்.
விஜய்யின் அரசியல் கருத்துக்கு பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கை விவகாரத்தில் அரசியல் ரீதியாக நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அரசியலுக்கு வந்துவிட்டால், தீப்பந்தத்திற்குள் மனிதன் சென்று வருவது போலத்தான் இருக்கும். அதுவரை தோண்டப்படாத தனிப்பட்ட விஷயங்கள், அரசியலுக்கு வந்தால் தோண்டப்படும். அது எல்லோருக்கும் நடந்ததே. விஜய் அரசியலுக்கு வரும்போதே இதை உணர்ந்துதான் வந்திருப்பார் என்று நம்புகிறேன். அதை அவர் கடந்து செல்ல வேண்டும்.
இதைத்தாண்டியே அவரது அரசியல் பயணம் இருக்கும். இதையெல்லாம் பார்த்துதான் மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பதை தேர்தல் தீர்மானிக்கும். அரசியலுக்கு வந்த பிறகு அழுத்தத்தில்தான் ஒருவர் தன்னை நிரூபிக்க வேண்டும். எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களுக்கும் ஆரம்ப காலத்தில் இப்படியான சூழல்கள் இருந்தன. இதில் பாசிட்டிவ், நெகட்டிவ் என நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. விஜய் இதை கடந்து செல்ல வேண்டும். இதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டி வரும். நியாயம், தர்மம் ஆகியவற்றை தாண்டியே அரசியல் பயணம் செல்ல வேண்டியிருக்கும்,” இவ்வாறு அவர் கூறினார்.