தமிழக செய்திகள்

ஆளும் திமுக அரசின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன் - நயினார் நாகேந்திரன்

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 34,497-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகள் கர்ப்பமாகி உள்ளதாக பாஜக மாநில இளைஞரணித் தலைவர் தெரிவித்திருந்தார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக ஆட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்தும், அக்குற்றங்களில் திமுகவினரின் பங்கு குறித்தும் சரியான புள்ளி விவரங்களுடன் பேசிய பாஜக மாநில இளைஞரணித் தலைவர் சூர்யா மீது ஆளும் அரசு எப்.ஐ.ஆர் (FIR) பதிவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அதிலும் குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 34,497-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகள் கர்ப்பமாகி உள்ளதாக சூர்யா தெரிவித்துள்ள கருத்து உண்மைக்குப் புறம்பானது எனக் கூறி வழக்கு போட்டுள்ள திமுகவின் ஏவல்துறைக்கு, பாஜகவின் மீதான காழ்ப்புணர்வு கண்களை மறைத்துவிட்டது என்று நினைக்கிறேன். காரணம், தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகத்தால் (DPH) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ நாளேட்டில் உள்ள விவரங்களைத் தான் தம்பி சூர்யா பிரதிபலித்திருந்தாரே தவிர, அவரது சொந்தக் கருத்துகளை அல்ல.

ஆக, தவறான தரவுகளை வழங்கியமைக்காக திமுகவின் ஏவல்துறை நியாயப்படி கைது செய்ய வேண்டியது சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை தான். அதை விட்டுவிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வலிமையைக் கண்ட வயிற்றெரிச்சலில், மக்கள் பிரச்சினைகளுக்காக ஓய்வின்றி உழைக்கும் எங்கள் நிர்வாகிகளைப் பொய் வழக்கு போட்டு முடக்க நினைப்பது கோழைத்தனமாது என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.