சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வரும் நிலையில், அதிமுகவும் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய தீவிரம் காட்டி வருகிறது.
பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் நாளை தமிழகம் வர உள்ளார். அப்போது தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், திடீர் பயணமாக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “தனது டெல்லி பயண திட்டம் குறித்து நாளை சொல்கிறேன்” என்று பதிலளித்தார்.