சென்னை,
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடத்தப்பட்டு, சட்டம்-ஒழுங்கு, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அதன்படி, முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. முதல் நாளில் நடைபெற்ற இரு அமர்வுகளில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசுத் துறைகளின் செயலாளர்கள் பங்கேற்று பல்வேறு நிர்வாக அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
மாநாட்டின் 2-வது நாள் கூட்டம் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர்கள், வனத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் நிறைவில் அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை முதல்-அமைச்சர் வழங்கினார். கூட்டத்தின் நிறைவில் உரையாற்றிய அவர், "அதிகாரிகள் விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்படலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகளில் விசாரணை மற்றும் நடவடிக்கைகளில் தாமதம் இருக்கக் கூடாது. காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும்" என்று கூறினார்.