தமிழக செய்திகள்

5 கிலோ கியாஸ் சிலிண்டர் பெற அடையாள அட்டை மட்டும் போதும்: எண்ணெய் நிறுவனங்கள்

கடந்த 4-ந் தேதி மட்டும் 90 ஆயிரம் 5 கிலோ கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை ஆகியுள்ளன.

புதுடெல்லி,

மேற்கு ஆசிய போர் காரணமாக கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. உடனுக்குடன் சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கிடையே, புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.

தாங்கள் வேலை செய்யும் இடங்களில் அவர்கள் புதிய இணைப்பு பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. இதனால் அவர்கள் 5 கிலோ கியாஸ் சிலிண்டரையே அதிகம் நம்பினார்கள். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அதனை பெறுவதிலும் கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் அவதிப்படுகிறார்கள்.

இந்த நிலையில் இதில் எளிய நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் புகுத்தி உள்ளன. அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், எந்த வதந்திகளுக்கும் செவிசாய்க்க வேண்டாம் என்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் தெரிவித்து உள்ளது.

தொழிலாளர்கள் செல்லுபடியாகும் மத்திய, மாநில அரசுகளின் (ஆதார், பான், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன்கார்டு உள்ளிட்டவை) அடையாள அட்டைகளை எடுத்துச் சென்று கியாஸ் வினியோகஸ்தர்களை அணுகி 5 கிலோ சிலிண்டரைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டு உள்ளது.

நாட்டில் கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் 6.6 லட்சம் 5 கிலோ கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்து உள்ளது. கடந்த 4-ந் தேதி மட்டும் 90 ஆயிரம் சிலிண்டர்கள் விற்பனை ஆகியுள்ளன.