சென்னை,
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அமைச்சரவையில், தவெகவிற்கு ஆதரவளிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசியுள்ளதாவது:-
"தவெகவிற்கு நாங்கள் ஆதரவளித்திருப்பது மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க கூடாது. கொல்லைப்புறம் வழியாக பாஜக கவர்னர் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். மக்களின் தீர்ப்பு என்பது திமுக, அதிமுக என இரு கட்சிகளுக்கு எதிராகத்தான் இருந்தது.அதேசமயம் அறுதி பெரும்பான்மையை யாரும் பெறவில்லை. இதில் தவெகவிற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பிருந்ததால் இடதுசாரிகள், விசிக ஆதரவளித்துள்ளோம்.
அதிமுகவை அவர்கள் ஆட்சியில் சேர்த்துக்கொள்வதோ, அமைச்சரவையில் இடம் தருவதோ மக்கள் தீர்ப்புக்கு எதிரானது. ஒரு நல்லாட்சிக்கு விரோதமானதாக அது அமையும். ஏற்கனவே இரண்டு திராவிட கட்சிகளுக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
அத்தகைய கட்சியின் ஆதரவைப் பெற்று தவெக ஆட்சியை தொடர்வது என்பது மக்களுடைய தீர்ப்புக்கு எதிராக அமையும். அத்தகைய நிலைக்கு அவர்கள் செல்லமாட்டார்கள் என நான் நம்புகிறேன். இவற்றை மீறி அதிமுகவின் ஆதரவை தவெக பெறுவார்கள் என்றால் நிச்சயமாக எங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும்." என தெரிவித்துள்ளார்.