திருச்சி
த.வெ.க. ஆட்சி சரியில்லை என்றால், நான் கேள்வி கேட்பேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து உள்ளது. முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்று உள்ளார். இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் திருச்சியில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
அப்போது அவரிடம் தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு பதிலளித்து பேசிய அவர், முதல்-அமைச்சர் விஜய், அவருக்கு வாக்களித்தவர்கள் மட்டுமின்றி, வாக்களிக்காதவர்களுக்கும் முதல்-அமைச்சராக இருக்கிறார். அவருக்கு காலஅவகாசம் தர வேண்டும். அவருடைய அரசின் செயல்பாடுகள் பற்றி விமர்சிக்கும் முன்பு, ஓராண்டாவது அவர்களுக்கு நேரம் தர வேண்டும் என்றார்.
எனக்கு விஜய் பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளன. நான், தேர்தலுக்கு முன்பு கூட அதுபற்றி பேசியிருக்கிறேன். ஆனால், அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்து உள்ளனர். அதன்பின், 120 நாட்களே ஆகியுள்ளன.
அதனால், அதற்குள் எந்த முடிவுக்கும் நாம் வந்து விட முடியாது. அவர்களுக்கு நாம் நேரம் அளிக்க வேண்டும். ஓராண்டுக்கு பின்னரும் அவர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்றால், அவர்களை நான் கேள்வி கேட்பேன் என்றார்.
அவர்களை உடனடியாக நாம் விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆட்சியில் இருப்பவர்களை நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, உடனே போய் நாம் விமர்சிக்க கூடாது. ஜனநாயகம் மற்றும் வாக்களித்த மக்களை நாம் மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.