தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதியில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அந்த பகுதியில் உள்ள கோவிலில் நடந்த சிறப்பு பூஜைக்கு பென்னாகரம் எம்.எல்.ஏ.கஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர். அப்போது அங்கு வந்த பாப்பாரப்பட்டி நகர த.வெ.க. செயலாளர் ரமேசின் தாயார் முனியம்மாள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு எனது மகனுக்கு முறையான அழைப்பு வரவில்லை.
இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் எனது மகனை அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ரமேஷ் சமூக வலைத்தளத்தில் ஒரு ஆடியோ வெளியிட்டார். அதில் 28 ஆண்டுகளாக நான் விஜய் ரசிகராக போஸ்டர் ஒட்டி உள்ளேன்.
நகர செயலாளராக கட்சிக்கு ஒருநாள் கூட தவறாமல் உழைத்து உள்ளேன். ஆனால் கட்சி நிகழ்ச்சிகளுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. நான் இறந்தால் என் சாவுக்கு குறிப்பிட்ட சிலர்தான் காரணம் என்று நிர்வாகிகளின் பெயரை குறிப்பிடுகிறார்.
இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.