தமிழக செய்திகள்

‘பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்றால் த.வெ.க. அரசு என்ன செய்யப்போகிறது?’ - எல்.முருகன் கேள்வி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடும் முடிவை முதல்-அமைச்சர் விஜய் திரும்ப பெற வேண்டும் என எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“சென்னை விமான நிலையத்தின் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், சென்னை நகரின் வளர்ச்சியை மையப்படுத்தியும் காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது . பரந்தூர் பகுதியில் முந்தைய தி.மு.க. அரசு இடத்தை தேர்வு செய்வதற்கே பல காலம் தாமதம் செய்தது. பெரும் தாமதம், நெருக்கடி, சிக்கல் என பல கட்ட தடைகளை தாண்டி விமான நிலையத்திற்கு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

ரூ.27,400 கோடி மதிப்​பில், சுமார் 5,746 ஏக்​கர் பரப்​பள​வில் இந்த விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதற்​காக சுமார் 1,700 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்கும் பணி கைவிடப்படுவதாக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இந்த திட்டம் கைவிடப்படுகிறது என்பது குறித்து விரிவான விளக்கம் எதுவும் தரப்படவில்லை. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் இந்த முடிவு என்பது முழுக்க முழுக்க அரசியல் அன்றி வேறல்ல.

தேர்தலுக்கு முன்பு பரந்தூர் பகுதிக்கு சென்ற ஜோசப் விஜய், த.வெ.க. ஆட்சியமைந்தால் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படும் என பேசினார். எனவே பரந்தூர் விமான நிலையத்தை த.வெ.க. அரசு முழுக்க முழுக்க அரசியலாகவே பார்ப்பதாக தெரிகிறது. பரந்தூர் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை த.வெ.க. அரசு என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வியும் எழுகிறது. இதற்காக செலவிடப்பட்ட இழப்பீட்டுத் தொகை என்னாகும் என்னாகும்?

த.வெ.க. அரசின் இந்த முடிவால் சென்னைக்கு புதிய விமான நிலையம் என்பது கானல் நீராகி விடும். இப்போது பரந்தூர் வேண்டாம் என்றால் த.வெ.க. அரசு என்ன செய்யப்போகிறது? வேறு இடம் என்றால் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைப்பது பெரும் காலதாமதமாகும் என்ற கவலை எழுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் புதிய இடத்தை அடையாளம் காணுவது எப்படி? எப்போது? என்ற கேள்வி எழுகிறது.

நாடு முழுவதும் பல நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் பணி பெருமளவு முடிந்து வருகின்றன. சென்னையின் தற்போதைய விமான நிலையத்தின் பயணிகளை கையாளும் திறன் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. பெங்களூரு, ஐதராபாத் என தென் மாநிலங்களில் உள்ள மற்ற பல விமான நிலையங்கள் சென்னையை முந்தி செல்கின்றன.

பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டம் கைவிடப்​பட்​டால் அந்த பகுதியின் ஒட்​டுமொத்த போக்​கு​வரத்து மற்​றும் வணிக வளர்ச்​சியும் பெரிய அளவில் தடைபடும். மெட்ரோ ரெயில் மற்​றும் சாலை உள்​கட்​டமைப்​புத் திட்டங்களின் நிலையும் கேள்விக்குரியாகி விடும். பூந்தமல்லி வரை இருக்கும் மெட்ரோ ரெயில் திட்​ட​மும் பரந்​தூரை மையப்​படுத்தி நீட்​டிக்கப்படவும் திட்டமிடப்பட்டு இருந்தது.

பரந்தூர் விமான நிலையத்தை முதன்​மைப்​படுத்தி பரந்​தூர் வழி​யாகச் செல்​லும் வகை​யில் சென்னை - பெங்​களூர் விரைவு வழிச்​சாலை உருவாக்கப்​பட்​டு வருகிறது. வி​மான நிலை​யம் நிறுத்​தப்​பட்​டால், பல கோடி மதிப்​பீட்​டில் உரு​வாக்​கப்​பட்ட சென்னை - பெங்​களூர் விரைவுச் சாலை மற்​றும் உள்​கட்​டமைப்​பு திட்டங்களின் நிலை என்ன? என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை பொறுத்தவரையில் த.வெ.க. அரசு அரசியலை விடுத்து மக்களின் நலனையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடும் முடிவை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் நலனை மனதில் கொண்டு பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்கி முழுவீச்சில் நடத்தி முடித்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.