தமிழக செய்திகள்

நாங்கள் கூட்டணி அமைத்தால் அடிமையா..? தி.மு.க.தான் காங்கிரசிடம் அடிமை: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்கள் முடிவெடுத்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் நடந்த தனியார் செய்தி நிறுவன கருத்தரங்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்து தேர்தலுக்கு தயாராகி உள்ளோம். தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க. கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.

நாங்கள் கூட்டணி அமைத்தால் அடிமை என சொல்கிறார்கள், ஆனால் தி.மு.க.தான் காங்கிரசிடம் அடிமை. குழப்பமான சூழலில்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி உள்ளது. முதல்-அமைச்சர் ஸ்டாலின் உடன் நேரடி விவாதத்திற்கு தயார்.

அ.தி.மு.க.விற்கும் டி.டி.வி. தினகரனுக்கும் கருத்து வேறுபாடு இல்லை, வாக்குகள் சிதறாமல் இருப்பதற்கு கூட்டணி அமைக்கின்றோம், ஓ.பி.எஸ்., சசிகலா குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்.

தி.மு.க. - த.வெ.க.விற்குதான் போட்டியே என விஜய் கூறி வருவதை நாங்கள் ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை. தவெக மீது எந்த சாப்ட் கார்னரும் இல்லை. அவர்களுக்கு ஒரு பிரச்னை வந்தபோது மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொண்டோம் அவ்வளவுதான்.

த.வெ.க. ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை. தேர்தலை சந்தித்தால்தான் அவர்களுக்கு எவ்வளவு வாக்கு உள்ளது என கணிக்க முடியும். விஜய் திரையில்தான் சூப்பர் ஸ்டார், ஆனால் அரசியலில்?.. எம்ஜிஆர் பெயரைச் சொன்னால்தான் கட்சியே நடத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.