சென்னை,
மரக்காணம் சம்பவத்திற்குப் பின்னரும் தி.மு.க. அரசு பாடம் கற்கவில்லை என, மத்திய இணை மந்திரி எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"தி.மு.க. அரசு கள்ளச்சாராய விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு மரக்காணத்தில் நடந்த சம்பவத்தில் இருந்து கூட தி.மு.க. அரசு பாடம் கற்கவில்லை. கிராமம் கிராமமாக டாஸ்மாக் கடை திறந்து வைத்திருக்கிறார்கள். பள்ளிக்கூட வாசலில் கஞ்சா விற்பனை நடக்கிறது.
இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் அதை தி.மு.க. அரசாங்கம் ஒழிக்கத் தவறிவிட்டது. அதனால் இன்று அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பொறுப்பை தட்டிக் கழித்த காரணத்திற்காக தி.மு.க அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுத்தே ஆக வேண்டும்."
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.