சென்னை,
ஸ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர்களின் வாழ்வாதாரம் காக்க உடனே நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கைத்தறி நெசவுத் தொழில் மூலம் தமிழக மக்களுக்குப் புத்தாடை நெய்து தரும் நெசவாளர்கள், தங்களின் பசிப்பிணியைப் போக்கிக்கொள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சித் தொட்டி திறந்து போராடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது நெஞ்சை உலுக்குகிறது. கடந்த இரண்டு மாதங்களாகக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நூல் வழங்கப்படாததால், 5,000-க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன.
வயிற்றுப் பிழைப்புக்கே வழியின்றித் தவிக்கும் நெசவாளர்கள் மீது, பொங்கல் பண்டிகைக்கான புதிய ரக சேலை என்ற கூடுதல் சுமையை ஜோசப் விஜய் அரசு திணித்துள்ளது. இந்தப் புதிய ரகத்திற்கு ஏற்ப தறிகளை மாற்றியமைக்க ரூ.10,000 வரை கூடுதல் செலவாவதோடு, ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் தற்காலிக வாக்குறுதி அளித்துள்ளபோதிலும், நெசவாளர் குடும்பங்களின் கண்ணீரைத் துடைக்க முதல்-அமைச்சர் விஜய் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மாத கால வேலையிழப்பிற்குத் தலா ரூ.10,000 நிவாரண உதவியும், உரிய சம்பள உயர்வும் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உடனடியாக மீட்க வேண்டும். நெசவாளர்களை மீண்டும் கஞ்சித் தொட்டி திறக்கும் நிலைக்குத் தள்ளாமல், தங்குதடையற்ற நூல் விநியோகத்தையும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் தவெக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.