ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஸ்ரீரங்கம் கோவிலில் 21 கோபுரங்களில் ஒன்றான ஸ்ரீ தாமோதரகிருஷ்ண கோபுரம் பணிகள் 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பல்வேறு சூழல் காரணமாக தாமதங்கள் ஏற்பட்டு தற்போது நம்முடைய ஆட்சியில் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறையின் கவனத்திற்கு வராமல் பத்திரப்பதிவுகள் நடக்கிறது. அறநிலைத்துறை கவனத்திற்கு வந்த உடனே சட்டரீதியாக மற்றும் காவல் துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழனி கோவில் நில விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து விவகாரம் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
d விவகாரத்தில் கடந்த திமுக ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?. தூங்கிக் கொண்டிருந்தார்களா?. கோவில் சொத்துக்களாக இருந்தாலும், கோவிலுக்கு தர்ம காரியங்கள் செய்வதற்காக கொடுக்கப்பட்ட அறக்கட்டளை சொத்துக்களாக இருந்தாலும் அது காப்பாற்றப்படும், இந்து சமய அறநிலையத்துறை கைவிடாது.
கோவில்களில் செல்போன்கள் அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது, சமூக வலைதளங்களில் பல விடியோக்கள் வருவதைப் பார்க்கிறோம். கடந்தகால ஆட்சியில் அதனை செயல்படுத்தவில்லை, இதனால் கோவில் கருவறை விடியோகூட வெளிவருகிறது, முதல் நிலை கோவில்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து செல்போன் கவுன்டர்கள் வைத்து பாதுகாப்பான முறையில் செல்போன்களை பாதுகாக்க கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அனைத்து முதல் நிலை கோவில்களில் செல்போன் கொண்டு செல்வதற்கான தடைகள் அமலுக்கு வரும்.
மனநிறைவுக்காக, கோவிலுக்குள் சாமிகும்பிட செல்லும்போது செல்போன் பயன்படுத்துவது தேவையற்ற ஒன்று, செல்போன்களை பயன்படுத்துவது, புகைப்படம் எடுப்பது, விடியோ எடுப்பது தேவையற்ற ஒன்று, இறைவனை தரிசிக்க செல்லும்போது எண்ணங்கள் இறைவன் மேல் இருக்க வேண்டும், என்ன பிரார்த்தனைக்கு வந்தோமோ, அதன் மேல் கவனம் இருந்தால் சிறப்பாக இருக்கும்.
அதேநேரம் ஊடக மற்றும் பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் மற்றும் அமைச்சர்கள் வரும்போது, கோவிலுக்கு வெளியே பேட்டி மற்றும் விடியோ எடுத்துக் கொள்ளலாம். கோவிலுக்குள் அவர்கள் தரிசனத்திற்கு செல்வதை விடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.