தமிழக செய்திகள்

அரசு பேருந்தில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு... வெளியான முக்கிய அறிவிப்பு

ஓட்டுநர்கள் பேருந்துகளில் சத்தமான பாடல்களை ஒலிக்க விடக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த சில காலங்களாகவே, அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விடுவதாகவும், இதனால் பேருந்திற்குள் ஒருவித இரைச்சல் சூழல் நிலவுவதாகவும் பயணிகளிடமிருந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்படுவோருக்கு இந்த அதிகப்படியான சத்தம் பெரும் மன உளைச்சலைத் தருவதாகத் போக்குவரத்துறை அமைச்சருக்கு புகார்கள் வந்தன.

இந்தநிலையில், அரசு போக்குவரத்துத்துறை செயலாளர் நிர்மல் ராஜ் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

* சக பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் செல்போன் பயன்படுத்தவும் ஸ்பீக்கர் போனில் பேசுவது, வீடியோ பார்ப்பது தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* பேருந்தில் பயணிகள் இயர்போன், ஹெட்போன் பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

* ஓட்டுநர்கள் பேருந்துகளில் சத்தமான பாடல்களை ஒலிக்க விடக்கூடாது. அனைத்து பேருந்துகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்ட உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.