சென்னை,
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-
நீர்வள விவகாரங்கள்
* கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது.
* முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்ட உயர்வை 152 அடியாக உயர்த்த வேண்டும்.
* தீபகற்ப நதிகளான கோதாவரி - காவிரி, காவிரி - குண்டாறு நதிகளை இணைக்க வேண்டும்
மீன்வளம்
* பாக் நீரிணை பகுதியில் இந்திய மீனவர்கள் சென்று மீன்பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமையை உறுதி செய்வதோடு, அவர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கச்சத்தீவை மீட்பதோடு, அங்கு தமிழக மீனவர்கள் சென்று மீன்பிடிக்கும் உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.
* மீனவர்களின் நலனுக்காக தேசிய ஆணையத்தை உருவாக்க வேண்டும்.
* இலங்கை தமிழர்களுக்கு சமமான அரசியல் மற்றும் வாழ்வுரிமைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்சார பிரச்சினைகள்
* தமிழகத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்வதிலும், ஒதுக்கீடு செய்வதிலும் இருக்கும் குளறுபடிகளை நீக்க வேண்டும்.
* நலிவடைந்த மின்சார வாரியங் களுக்கு வழங்கும் நிதியை மத்திய அரசு முறைப்படுத்த வேண்டும்.
* மின்சார திருத்த சட்ட மசோதா 2020-ஐ திரும்பப் பெற வேண்டும்.
நிதி விவகாரங்கள்
* வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
* மாநில நிதி நிலையில் 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏற்படுத்திய தாக்கங்களை கவனிக்க வேண்டும்.
* 14-வது நிதிக்குழுவிடம் பரிந்துரைகளின்படி மாநில அரசுக்கு தர வேண்டிய நிதியின் பாக்கியை உடனே தர வேண்டும்.
* தமிழக அரசுக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பாக்கித் தொகைகளை வழங்க வேண்டும்.
* 1996-97 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளில் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய மத்திய வரி பங்குகளை அளிக்க வேண்டும்.
* தமிழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மத்திய நிதியுதவி திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.
* தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதியில், தேசிய உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி (என்.ஐ.ஐ.எப்.) முதலீடு செய்ய வேண்டும்.
* மாநில பேரிடர் நிவாரண நிதியை கூடுதலாக ஒதுக்க வேண்டும்.
நுழைவுத்தேர்வுகள்
* நீட் என்ற மருத்துவ கல்விக்கான தகுதித் தேர்வையும், மற்ற கல்வி சேர்கைக்கும் வைக்கப்பட உள்ள நுழைவுத் தேர்வுகளையும் கைவிட வேண்டும்.
* கோவையில் புதிய எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தோற்றுவிக்க வேண்டும்.
* தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
* லிப்போசோமால் ஆம்போடெரிசின் பி போன்ற உயிர் காக்கும் மருந்துகளை தேவையான அளவில் வினியோகம் செய்ய வேண்டும்.
* மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை கல்வி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை அனுமதிக்க வேண்டும்.
வேளாண்மை
* வேளாண்மை தொடர்பான 3 சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்.
* நெல் அரவை மானியத்தொகையை தமிழகத்திற்கு உடனே வழங்க வேண்டும்.
தொழிற்சாலை கோரிக்கை
* செங்கல்பட்டு எச்.எல்.எல். பயோடெக் மையம், குன்னூர் பாய்ச்சர் மையம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியை உடனடியாக தொடங்க வேண்டும்.
* மெகா டெக்ஸ்டைல்ஸ் பூங்காவை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.
* சேலம் இரும்பாலையில் கூடுதலாக உள்ள நிலப்பரப்பை பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு அளிக்க வேண்டும்.
* குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி உதவி அளிக்க வேண்டும்.
பள்ளிக்கல்வி
* தேசிய கல்விக்கொள்கையை திரும்பப் பெற வேண்டும்.
* சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கான மானியங்களை உடனே வழங்க வேண்டும்.
* குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சென்னை மெட்ரோ ரெயில்
* சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்டத்திற்கான அங்கீகாரத்தை, மாநில மற்றும் மத்திய அரசின் 50 சதவீத நிதிப் பங்களிப்புடன் அளிக்க வேண்டும்.
* சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்கும் ரெயில்வே நிலங்களை குத்தகைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
தமிழ் வளர்ச்சி
* தமிழை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும். ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும்.
* தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
* சென்னையில் உள்ள தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்தை புதுப்பிக்க வேண்டும்.
* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் நலன்
* பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரை அடையாளம் காண்பதற்காக உள்ள வருமான உச்சவரம்பை திரும்பப் பெற வேண்டும்.
* மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மாநில அரசுகளே மாநில தொகுப்பில் ஒதுக்கீடுகளை வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
நெடுஞ்சாலை, துறைமுகம்
* மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையேயான உயர்மட்ட சாலை திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.
* சென்னை விமான நிலையம் - செங்கல்பட்டு உயர் மட்ட சாலைத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
* சென்னை துறைமுகம் மற்றும் திருவொற்றியூரை இணைக்கும் கடல் பாலம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
* சென்னை, கன்னியாகுமரி இடையேயான 6 மற்றும் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்.
* சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச் சாலைத் திட்டத்தையும் கைவிட வேண்டும்.
* தமிழகத்தின் துரிதமான பொருளாதார வளர்ச்சிக்காக தூத்துக்குடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
* சேதுசமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
நீதித்துறை, விமான நிலையம்
* சென்னையில் சுப்ரீம் கோர்ட்டின் கிளையை உருவாக்க வேண்டும்.
* சென்னையில் உலகத் தரம் வாய்ந்த புதிய சர்வதேச விமான நிலையத்தை அமைக்க வேண்டும்.
* மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.
* சேலம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதோடு அவற்றை நவீனப்படுத்த வேண்டும்.
புதிய ரெயில் திட்டங்கள்
* மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு வழிவகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
* ஊரகப் பகுதியில் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் பணியாற்றுவோர் 150 நாட்கள் பணியாற்ற வழிவகை செய்யும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
* நகர்ப்புற வேலை வாய்ப்பு ஊதிய திட்டத்தை தொடங்க வேண்டும்.
* தமிழகத்திற்கான புதிய ரெயில்வே திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
* குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
* சென்னையில் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.
* ஹைட்ரோகார்பன் மற்றும் நியூட்ரினோ தொடர்பான திட்டங்களை கைவிட வேண்டும்.
* சுற்றுப்புறச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பாணை - 2020-ஐ திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.*