தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணும், ஒரு இளம் பெண்ணும் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களிடம் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர். அந்த பிரசுரத்தில் கிறிஸ்தவ மதம் குறித்த கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த இந்து எழுச்சி முன்னணி நிர்வாகி ராம்குமார், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி காசிமாயன் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் மதத்தை பரப்பும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யக்கூடாது எனக் கூறி தடுத்தனர்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் எற்பட்டது. ஒருகட்டத்தில் துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்த நபரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு வரும்படி இழுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த க.விலக்கு போலீசார் இருதரப்பினரையும் விலக்கி விட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொது இடமான அரசு மருத்துவமனை முன்பு இதுபோன்ற மதம் சார்ந்த துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்யக்கூடாது என்றும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.