தமிழக செய்திகள்

கும்பகோணத்தில், வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் தர்ணா

மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி கும்பகோணத்தில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்:

மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி கும்பகோணத்தில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கும்பகோணம் அரசினர் ஆண்கள் தன்னாட்சி கல்லூரி வாசர் முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

அப்போது கல்லூரி மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் பிரதீப் தலைமை தாங்கினார். கிளை உறுப்பினர்கள் கோபி, அபி, நவின், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராகுல், தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

கடும் நடவடிக்கை

மணிப்பூரில் அமைதி ஏற்படுத்த வேண்டும். அங்கு பெண்களை பாலியல் துன்புறத்தலுக்குள்ளாக்கிய குற்றவாளிகளை கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தையொட்டி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

மதுக்கூர்

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்தக்கோரி மதுக்கூர் பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய பொறுப்பு செயலாளர் அய்யநாதன் தலைமை தாங்கினார். மூத்ததலைவர் காசிநாநன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஒன்றிய செயலாளர் சிதம்பரம், மாவட்ட குழு உறுப்பினர் பழனிவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

SCROLL FOR NEXT