தமிழக செய்திகள்

மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை

முன் விரோதம் காரணமாக படுகொலை நடந்துள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்

மதுரை,

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை செல்லூர் பகுதியில் பாலசுப்பிரமணியன் நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தெரியாத 4 பேர், அவரை வெட்ட முயன்றனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பாலசுப்ரமணியன், தப்பியோட முயன்றார். ஆனாலும் அந்த கும்பல், ஓட ஓட விரட்டி பாலசுப்பிரமணியத்தை படுகொலை செய்தது.

பாலசுப்பிரமணியன் மீது சில குற்ற வழக்குகள் உள்ளதால், முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்துள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். அத்துடன், தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

SCROLL FOR NEXT