தமிழக செய்திகள்

சங்கம் வளர்த்த மதுரையில் கலைஞர் நூலகம்: அ.தி.மு.க.விற்கு கசக்கிறது அமைச்சர் எ.வ.வேலு கடும் கண்டனம்

கதை-கற்பனை-அறியாமை அடங்கிய அறிக்கை, சங்கம் வளர்த்த மதுரையில் கலைஞர் நூலகம் அமைவது அ.தி.மு.க.விற்கு கசக்கிறது அமைச்சர் எ.வ.வேலு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

சங்கம் வளர்த்த மதுரையில் கலைஞர் நூலகம் அமைவது அ.தி.மு.க.வுக்கு கசக்கிறது. இதனால் தான் கதை, கற்பனை, அறியாமை அடங்கிய அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி அதனை கலைஞர் நூலகமாக மாற்ற தி.மு.க. அரசு நினைப்பது சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை என்ற அறியாமைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தென் தமிழ்நாடு மக்களின் கனவை நனவாக்க அங்குள்ள இளைஞர் சமுதாயம் ஏற்றம் பெற மதுரையில் கருணாநிதி பெயரில் சர்வதேச தரத்தில் நூலகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தது இருவருக்கும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் நூலகத்திற்கு 7 இடங்களை தேர்வு செய்து, அவற்றுள் இறுதியாக மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் பொறியாளர்கள் குடியிருப்பு வளாகம் தேர்வு செய்யப்பட்டது. இந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள குடியிருப்பில் பென்னிக்குயிக் வாழ்ந்ததாக திடீரென ஒரு புரளியை கிளப்பி விட்டு பொய்ச் செய்தியைப் பரப்பி இப்போது அறிக்கை வடிவில் வெளியிட்டு மதுரைக்கு வரும் நூலகத்தை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்று அ.தி.மு.க. வழக்கம் போல் தங்களது மலிவு அரசியலை நடத்துவது அப்பட்டமாக வெளிப்படுகிறது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகங்களுள் ஒன்றான தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி, சென்னை கோட்டூர்புரத்தில் உருவாக்கிய அண்ணா பெயரிலான நூற்றாண்டு நூலகத்தைச் சிதைத்தார்கள். கருணாநிதி, நாள்தோறும் உன்னிப்பாக கண்காணித்து தொலைநோக்குப் பார்வையுடன் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை காழ்ப்புணர்ச்சியோடு மாற்றினார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைத் திட்டங்களை சிதைத்தவர்கள், இப்போது கலைஞர் நூலகம் அமைவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலுடன் கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்த்து, அ.தி.மு.க. எப்போதுமே தமிழ்நாட்டின் அழிவு சக்திதான் என்பதை நாட்டு மக்களுக்கு மீண்டும் உணர்த்தியுள்ளார்கள்.

கலைஞர் நூலகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் குறித்து வதந்தி கிளம்பிய போதே 1841-ம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி பிறந்த கர்னல் பென்னிகுயிக் 1911-ம் ஆண்டு மார்ச் 9-ந்தேதி இயற்கை எய்தியுள்ளார். பொதுப்பணித்துறை ஆவணங்களைப் பரிசீலனை செய்ததில் இந்த கட்டிடமானது 1912-ல் பூமி பூஜை செய்யப்பட்டு 1913-ல் கட்டி முடிக்கப்பட்டதாக பொது கட்டிட பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்னல் ஜான் பென்னிகுயிக் மறைந்த காலத்திற்கு பின் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் இக்கட்டிடத்தில் அவர் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.அனீஷ் சேகர் தெளிவாக தெரிவித்து உள்ளார்.

இளைஞர்கள் கல்வியறிவு பெறுவதும் பிடிக்கவில்லை; தென் தமிழ்நாட்டு மக்கள் பயன் பெறும் இந்த நூலகம் - சங்கத் தமிழின் தலைநகராம் மதுரையில் அமைவதையும் இவர்கள் விரும்பவில்லை. எனவே கங்கணம் கட்டிக்கொண்டு விஷத்தைக் கக்குகிறார்கள். அன்னைத் தமிழ் இவர்களுக்கு ஆட்சியிலிருந்த போதும் கசந்தது. கர்னல் பென்னிகுயிக் சிலை வைத்து அழகு பார்த்தவர் கருணாநிதி. அதை புதுபொலிவுடன் மாற்றியது தி.மு.க. ஆட்சி. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உழவர்களின் உரிமைகளை நிலைநாட்டி இன்றைக்கு தென் தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்கள் பயனுறும் நிலையை உருவாக்கியதும் தி.மு.க. ஆட்சி தான் என்பதை ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் உணர வேண்டும்.

ஆகவே கதை அளந்து கலைஞர் நூலகத்தை தடுத்து விடலாம் என்று கனவிலும் நினைக்க வேண்டாம். மதுரை மாநகரில் கருணாநிதி பெயரிலான நூலகம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கம்பீரமாக எழும்-இளைஞர்கள் எழுச்சி பெறுவர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்