தமிழக செய்திகள்

மயிலாடுதுறையில், அனைத்து மதத்தினர் தேவாரம் பாடினர்

உலகத் தாய்மொழி தினம்:மயிலாடுதுறையில், அனைத்து மதத்தினர் தேவாரம் பாடினர்

சீர்காழி திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் கோவிலில் மே 24-ந்தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் இயற்றிய "ஓருருவாயினை" என தொடங்கும் தேவார திருப்பதிகத்தினை ஒரு கோடி முறை ஓதுவதற்கு திட்டமிடப்பட்டு, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், அத்திட்டத்தை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் கடந்த 12-ந்தேதி திருக்குவளையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக ஆதீன கிளை மடங்கள், ஆதீன கல்வி நிலையங்களில் இப்பதிகம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை ஜெயின் சங்க கட்டிடத்தில் அனைத்து மதத்தினர் இணைந்து 'ஓருருவாயினை" தேவாரப்பதிகம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

தருமபுரம் ஆதீனக்கட்டளை சுப்பிரமணிய தம்பிரான் சாமிகள் பதிகத்தை பராயணம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தருமபுரம் ஆதீனக்கல்லூரி செயலாளர் செல்வநாயகம் மற்றும் பலர் கலந்துகொண்டு தேவாரப்பதிகத்தை பாராயணம் செய்தனர். இதேபோல் குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பாராயண நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட 2600 பேர் தலா 3 முறை என மொத்தம் 7800 முறை தேவாரப்பதிகத்தினை பாராயணம் செய்தனர். 

SCROLL FOR NEXT