நெய்வேலி,
நெய்வேலி இந்திராநகர் மாற்று குடியிருப்பை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜா(வயது 44). இவர், நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரும், பெட்ரோல் பங்க் ஊழியரான நண்டு குழியை சேர்ந்த பெரியதம்பி மகன் வீரமணி(42) என்பவரும் பெட்ரோல் பங்க்கில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தென்குத்து கிராமத்தை சேர்ந்த அசோக் என்பவர், அங்கு வந்து தன்னை பற்றிதான் இருவரும் பேசுவதாக நினைத்து வீரமணியை கையால் தாக்கினார். இதை தடுத்த சி.ஆர்.காலனியை சேர்ந்த மணிகண்டன், கோ.சத்திரத்தை சேர்ந்த மதிசேகர் ஆகியோரையும் அசோக் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த வீரமணி, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில் அசோக் மீது நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.