ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கைக்காட்டியில் உள்ள கூடஹல்லா கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ் மன்னன். இவரது மகன் சசிக்குமார் என்ற அஜித் (வயது 24). கோடநாடு அருகே உள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கீதா (24). இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அஜித்துக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் பழக்கம் இருந்தது. இதில் அவர் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவிலும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தி மற்றும் மனைவியுடன் தகராறு காரணமாக மணமுடைந்த அஜித் நேற்று காலை அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.