சென்னை,
மருத்துவப்படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 27 சதவீதம், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு நடப்பு கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படாததால், இந்திய மக்கள் தொகையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த மாணவர்கள் எத்தனை சதவீதம் பேர் இருக்கிறார்கள்? என்பதை மிகவும் துல்லியமாக எடுத்துக்கூற இயலாது.
எனினும், ஆரம்பப்பள்ளியில் மாணவர்கள் சேருவதற்காக வழங்கிய விவரங்களின் அடிப்படையில், சாதி வாரியாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 45 சதவீதம் பேரும், பொதுப்பிரிவு மாணவர்கள் 25 சதவீதம் பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் (எஸ்.சி.) 19 சதவீதம் பேரும், பழங்குடியின மாணவர்கள் (எஸ்.டி.) 11 சதவீதம் பேரும் இருக்கிறார்கள்.
கல்வி மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறை என்ற அமைப்பு, மாணவர்களின் சாதி சான்றிதழ் தொடர்பான விவரங்களை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்து வருகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால், தென்மாநிலங்களில் தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. அதிலும் குறிப்பாக ஒட்டுமொத்த இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
தமிழகத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 71 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இதற்கு அடுத்தப்படியாக கேரளாவில் 69 சதவீதம் பேரும், கர்நாடகாவில் 62 சதவீதம் பேரும் இருக்கிறார்கள். வட மாநிலங்களை பொறுத்தமட்டில் பீகாரில் 61 சதவீதமும், உத்தரப்பிரதேசத்தில் 54 சதவீதமும், ராஜஸ்தானில் 48 சதவீதமும், அரியானாவில் 31 சதவீதம் பேரும், பஞ்சாப்பில் 16 சதவீதம் பேரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 71 சதவீதம் இருப்பது போன்று, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 23 சதவீதமும், பொதுப்பிரிவு மாணவர்கள் 4 சதவீதமும், பழங்குடியின மாணவர்கள் 2 சதவீதமும் இருக்கிறார்கள். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் அதிகமாக இருப்பதால், மத்திய அரசு அறிவித்துள்ள இடஒதுக்கீடு மூலம் அதிகமானவர்களுக்கு மருத்துவ கல்வியில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
இதனால் மத்திய அரசின் இடஒதுக்கீடு அறிவிப்பு தமிழகத்துக்கு நல்ல பலனை கொடுக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், தமிழகம் மருத்துவ துறையில் மேலும் உயர்ந்த நிலையை அடைவதற்கான உந்து சக்தியை வழங்குவதாகவும், மருத்துவத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற தமிழக மாணவர்களின் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் என்று கட்டியம் கூறும் வகையிலும், இடஒதுக்கீடு மூலம் பயன்பெறும் தகுதியுள்ள மாணவர்கள் அதிகமாக இருக்கும் தற்போதைய சூழல் அமைந்துள்ளதாக கல்வி யாளர்கள் கருதுகின்றனர்.