தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தேனி மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையிலான அதிகாரிகள் தேனி மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதன்படி ஆண்டிப்பட்டி நகரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஆண்டிப்பட்டி நகரில் உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள பெரிய வாய்க்கால்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜாராம், ஆண்டிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமிபாண்டியன், தலைவர் சந்திரகலா ஆகியோர் ஆய்வு செய்தனர்.