கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெறுகிறது. இதில் பெரும்பாலும் தமிழக விவசாயிகளுக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளன. இங்கு விளையும் ஏலக்காய்கள் அங்குள்ள மையங்களில் பதிவு செய்யப்பட்டு தேசிய நறுமண பொருள் வாரியம் மூலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புத்தடி மற்றும் போடியில் உள்ள அலுவலங்களில் தரம் பிரித்த பின் ஏலம் விடப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த ஏலத்தில் போடி, தேவாரம், பட்டிவீரன்பட்டி, விருதுநகர் மற்றும் கேரளாவில் இருந்து ஏலக்காய் வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுப்பார்கள். கடந்த 2 ஆண்டுகளாக ஏலக்காய் சரியான விலை போகவில்லை. ஒரு கிலோ ரூ.1,000 வரை இருந்தது.
இந்நிலையில் நேற்று போடியில் ஏலக்காய் ஏலம் நடந்தது. 86 டன் ஏலக்காய் பதிவு செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் 65 டன் ஏலக்காய் ஏலம் போனது. ஏலத்தின்போது ஒரு கிலோ ஏலக்காய் ரூ.1.150 முதல் ரூ.2,600 வரை விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.500 விலை உயர்ந்து உள்ளது. இதுகுறித்து ஏலக்காய் வியாபாரி ஒருவர் கூறுகையில், துபாயில் வருகிற 25-ந்தேதி நடைபெறும் உலக வர்த்தக கண்காட்சி 2023-ல் சந்தைப்படுத்துவதற்காக அதிக அளவில் ஆர்டர்கள் வந்துள்ளது. எனவே ஏலக்காய் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்ந்துள்ளது என்றார்.