தமிழக செய்திகள்

வெடி விபத்து எதிரொலி; புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்க நேரக் கட்டுப்பாடு விதிப்பு

விருதுநகர், திருச்சூர் பட்டாசு வெடி விபத்து எதிரொலியாக, புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது

விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 19-ந் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 25 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். அதேபோல, கேரளாவின் திரிச்சூரில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 14 பேர் பலியாகினர். 40 பேர் காயம் அடைந்தனர்.

விருதுநகர், திருச்சூர் பட்டாசு வெடி விபத்து எதிரொலியாக, புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பட்டாசு தயாரிப்பில் ஈடுபட கூடாது என்று போலீசார் தெரிவித்தனர். வெயிலின் தாக்கத்தால் வெடி விபத்துகள் நேரிடலாம் என்பதை கருத்தில் கொண்டு புதுச்சேரி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்துள்ளனர்.