திருச்செந்தூர்
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அரசு சார்பில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் அவரது முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது .
பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து விழா நடைபெறும் வீரபாண்டியபட்டணத்திற்கு கார் மூலம் வருகை தந்தார். அவரை தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் நிர்வாக இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்திடிவி இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
முன்னதாக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வருகை தந்தார். அவரை தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன்
பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பா.சிவந்தி ஆதித்தனார் சிலையை திறந்துவைத்தார். தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கபட்டு இருந்த பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ படத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் நிர்வாக இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்திடிவி இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டு இருந்த நூலகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
தொடர்ந்து, அங்குள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் விழா தொடங்கியது.
விழாவையொட்டி இன்று காலை முதலே விழா நடைபெறும் இடத்தில் மக்கள் அலைகடலென திரண்டனர். திருச்செந்தூரே விழாக்கோலம் பூண்டுள்ளது. திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறது.