தமிழக செய்திகள்

தொடர் கனமழையால் ஒரே வாரத்தில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்தது

தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 3 அடி உயர்ந்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டி வருவதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரிக்கு வினாடிக்கு 1,420 கன அடி தண்ணீர் வீதம் வந்து கொண்டு இருந்தது. ஏரியின் நீர்மட்டம் 29.66 அடியாக பதிவாகியது. நீர் இருப்பு 1.662 டி.எம்.சி.யாக இருந்தது.

ஏரியில் இருந்து வினாடிக்கு 53 கன அடி வீதம் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலம் அனுப்பப்படுகிறது. கடந்த 9-ந் தேதி ஏரியின் நீர் மட்டம் 26.32 அடியாக இருந்தது. தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் ஒரு வாரத்தில் 3 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏரிக்கு தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் வரத்து இதே போல் தொடர்ந்தால் விரைவில் ஏரி முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT