தமிழக செய்திகள்

மனித கறி சமைக்கப்பட்ட சம்பவம்: தம்பதி கைது - போலீசார் வெளியிட்ட தகவல்

கூடுவாஞ்சேரி வீட்டில் பிரியாணி அண்டாவில் பெண்ணின் உடலை போட்டு சமைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருந்தது.

சென்னை,

கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தம்பதி, மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டம், காஷிம்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

எக்ஸ்பிரஸ் ரெயில்

இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கூடுவாஞ்சேரி காவல் நிலைய போலீசார், இம்மாத தொடக்கத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மாணிக் உத்தீன் லஸ்கர் (22) மற்றும் பகாபதி மாஜி ஆகிய இருவரும் மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டம், காஷிம்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இருவரும் மணிப்பூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, Transit Warrant பெறப்பட்ட பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

பெண்ணின் உடல்

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, ரெயில் எண் 12621-ன் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில், ரெயில் ஆக்ராவை சென்றடைந்தபோது சிவப்பு நிற சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசியதை பயணிகள் கவனித்தனர். இதையடுத்து, அரசு ரெயில்வே போலீசார் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது, தலை துண்டிக்கப்பட்டு பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர், உயிரிழந்த பெண் ஹயாத்துன் நிஷா (38) என்பதும், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பதிவான CCTV காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், அந்த சூட்கேஸை எடுத்துச் சென்ற ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.

வழக்குப் பதிவு

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள வாடகை வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு ஒரு பெரிய சமையல் பாத்திரத்தில் பெண்ணின் உடலின் மேலும் சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக T8 கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் முதலில் பெண் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

விசாரணையில், மாணிக் உத்தீன் லஸ்கர், த/பெ. மோனிருதீன் லஸ்கர், தக்ஷிண் கிருஷ்ணபூர், சோனாபரிகாட், கச்சார் மாவட்டம், அசாம் மாநிலம் மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி, த/பெ. சோட்ரே மாஜி, ராத்பூர், கேந்துஜார், ஒடிசா 758016 ஆகியோர் சந்தேக நபர்களாக போலீசாரால் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த தம்பதியரை கைது செய்ய போலீஸ் தனிப்படைகள் பல்வேறு இடங்களில் தேடுதல் மேற்கொண்டனர்.

கைது

29.08.2026 இன்று, குற்றம்சாட்டப்பட்ட மாணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி ஆகிய இருவரும் மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டம், காஷிம்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களை Transit Warrant பெற்று தாம்பரத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தகாத உறவின் காரணமாக கொலை நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிஷா உடனான தொடர்பை மனைவி பகமதி மாஜி கண்டித்ததால் கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.