விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் செய்யாதுரை. நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்ததாரரான இவரின் வீடு மற்றும் இவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த 6 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கும் மேலாக சோதனை நடத்தினர்.
மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் மற்றும் அவரின் தொடர்புடைய இடங்கள் என மொத்தம் இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
வருமானவரித்துறையினர் மொத்தம் 40 இடங்களில் நடத்திய இந்த சோதனையின் முடிவில் இரண்டு ஒப்பந்ததாரர்களும் கணக்கில் வராத 500 கோடி ரூபாயை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அரசு ஒப்பந்ததாரர்களான இவர்கள், போலியான கணக்குகளை காட்டி இந்த வருமானத்தை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
போலி ரசீது மற்றும் ஆவணங்கள் மூலம் வருமானவரித்துறைக்கு கணக்கு காட்டாமல் ஒப்பந்ததாரர்கள் இருவரும் வருமானத்தை மறைத்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.