தூத்துக்குடி,
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கடத்தி வரப்பட்ட ரூ.9 கோடி பணத்தை தூத்துக்குடி நகைக்கடை அதிபரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ரூ.1.30 கோடி சிக்கியது.
வருமான வரித்துறை துணை இயக்குநர் ஜெகீஷ் அளித்த தகவலின் பேரில், பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி மண்டல துணை போலீஸ் கமிஷனர் நாராயண் வழிகாட்டலில், எலெக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள ஓசூர் மெயின் ரோடு, வீரசந்திரா சிக்னல் பகுதியில் கடந்த 18-ம் தேதி இரவில் கேரள பதிவு எண் கொண்ட காரை போலீசார் வழிமறித்துச் சோதனையிட்டனர்.
அப்போது காரில் இருந்த 2 பெட்டிகளில் கட்டுக்கட்டாக ரூ.9 கோடி ரொக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், காரில் வந்த சச்சின் உள்பட 2 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். முன்னதாக, தூத்துக்குடியில் உள்ள சச்சினின் வீட்டில் தமிழக வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
அந்த சோதனையின் போது வீட்டில் இருந்து ரூ.1.30 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. வருமான வரித்துறை சோதனையிலிருந்து தப்பிப்பதற்காகவே சச்சின் பல கோடி ரூபாய் பணத்துடன் காரில் பெங்களூரு நோக்கி தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.9 கோடி ரொக்கம், கார் மற்றும் பிடிபட்ட சச்சின் உள்ளிட்ட 2 பேரையும் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக வருமான வரித்துறை அதிகாரிகள் இணைந்த இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.10.30 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் ஹவாலா முறையிலானது தானா என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.