சென்னை,
சட்டசபையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு;
”மாணவர்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சமூகநீதி விடுதிகளில் பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணம் ரூ.1,400/-லிருந்து ரூ.1,800/-ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணம் ரூ.1,500/-லிருந்து ரூ.2,000/-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்திற்காக கூடுதலாக ரூ.32.53 கோடி செலவாகும்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த, சென்னையில் பயிலும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவியர்களுக்காக, 100 கல்லூரி மாணவியர்கள் பயன்பெறும் வகையில் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் சென்னையில் ஒரு சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி ரூ. 54 இலட்சம் செலவில் புதிதாக தொடங்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,238 சமூகநீதி பள்ளி, கல்லூரி விடுதிகளில் சுகாதாரமான வாழ்விடச் சூழலை உறுதி செய்யும் நோக்கில், விடுதிகளில் உள்ள அனைத்து ஜன்னல்களுக்கும் ரூ.26.85 கோடியில் தரமான கொசுவலைகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.