தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 14-ந்தேதி அணைக்கு வினாடிக்கு 1,581 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
அதன்படி நேற்று கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,774 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரத்து 305 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 50 அடியாக உள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதேபோல ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 28 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 340 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 42.97 அடியாக உள்ளது.
கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தண்ணீரில் ரசாயன கழிவுகள் கலந்துள்ளதால் மதகுகள் வழியாக நுங்கும், நுரையுமாக தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி. அணைகளில் இருந்து அதிக அளவில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.