தமிழக செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- பரிசல் இயக்க மீண்டும் தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிக ரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறை வதுமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்த நிலையில் கர்நாடக அணைகளான கபினியில் இருந்து வினாடிக்கு 1,600 கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரத்து 186 கனஅடியும் என மொத்தம் தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 786 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

7 ஆயிரம் கனஅடி

இதனால் நேற்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பரிசல் இயக்க மீண்டும் தடை

நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பரிசல் இயக்க வழங்கப்பட்ட அனுமதியை, நேற்று மீண்டும் மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது.இருப்பினும் அருவிகள் மற்றும் ஆற்றில் குளிக்க எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

SCROLL FOR NEXT