சென்னை,
கர்நாடகா, கேரளம் உள்பட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட் டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடியானது.
இதற்கிடையே மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து மீண்டும் குறைந்தது. நீர்வரத்து நேற்று காலையில் வினாடிக்கு 4 ஆயிரத்து 385 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 80.31 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 80.93 அடியாக உயர்ந்தது.
இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,385 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,179 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 80.93 அடியிலிருந்து 81.31 அடியாக அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 42.27 டிஎம்சியாக உள்ளது.