புதுச்சேரி,
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடியை நீக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்று முதல்வர் நாராணசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான அதிகாரம், உரிமையை பறிக்கும் வகையில் கிரண்பேடி செயல்பட்டார். கிரண்பேடி இதுபோன்று செயல்பட்டதை மத்திய பாஜக அரசு ஊக்குவித்தது. புதுச்சேரி மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களையும் அவர் தடுத்து நிறுத்தினார்.
மக்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று கேட்டால் பணமாக கொடுங்கள் என்றார். பல கட்ட போராட்டங்கள் நாங்கள் நடத்திய பிறகே கிரண்பேடியை மத்திய அரசு நீக்கியுள்ளது.
ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் புதுச்சேரி மக்களின் உரிமை காக்கப்பட்டுள்ளது. அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழிசை செயல்பட வேண்டும். ஆளுநர் யாராக இருந்தாலும் விதிகளையும், மீறக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.