தமிழக செய்திகள்

சேப்பாக்கத்தில் இந்தியா-ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டி: பயணிகளுக்கு சலுகை வழங்கிய மெட்ரோ

கிரிக்கெட் போட்டியை பார்க்க வருபவர்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரெயில் சேவையை நீட்டித்துள்ளது.

சென்னை,

மெட்ரோ ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்த, நாளை (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா-ஜிம்பாப்வே கிரிக்கெட் ஆட்டத்தை பார்வையிட வருபவர்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரெயில் சேவையை நீட்டித்துள்ளது.

கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை பயன்படுத்தி போட்டி நடைபெறும் நாளில் பயணிகள் எந்த மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு பயணம் செய்யலாம். டிஜிட்டல் நுழைவு பயணச்சீட்டுகளில் உள்ள கியூஆர்-கோர்டு குறையீடுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு எந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.

கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் நாளை ஒரு சுற்றுப்பயணத்திற்கு (2 முறை உள்ளே, 2 முறை வெளியே) பயன்படுத்தலாம். மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்பே, பயணிகள் தங்களது பயணச்சீட்டுகளை அந்தந்த செல்போன் செயலி அல்லது இணையதளம் மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT