சென்னை,
இந்தியாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பெட்ரோலிய பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், பொறியியல் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஜவுளி தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்திய ஏற்றுமதிக்கான முன்னணி சந்தைகளாக உள்ளன.
இதனிடையே மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழல் மற்றும் சர்வதேச அரசியல் நெருக்கடிகள் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், சவாலான சூழலுக்கு மத்தியில் 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் பல்வேறு இந்திய மாநிலங்கள் அதிக ஏற்றுமதியை செய்துள்ளன.
இதில் குஜராத் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. 2026-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில்(ஜனவரி முதல் ஜூன் வரை) குஜராத் மாநிலம் 6,02,978 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளது. அடுத்ததாக மராட்டிய மாநிலம் 3,41,297 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளது.
தொடர்ந்து 2,98,109 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து, தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது நம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 13.46 சதவீதமாகும். இதையடுத்து நான்காம் இடத்தில் கர்நாடகா, ஐந்தாம் இடத்தில் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.