சென்னை,
தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது. த.வெ.க. அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. காங்கிரசைச் சேர்ந்த ராஜேஷ்குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் பங்கேற்க சம்மதித்துள்ள நிலையில், வி.சி.க.வின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கவர்னர் அர்லேகர் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர் பதவியேற்றுள்ளனர். புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.விஸ்வநாதனுக்கு உயர் கல்வித்துறையும், எஸ்.ராஜேஷ்குமாருக்கு சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலையில், தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார். பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்ற ஷாஜகான் அமைச்சராக பதவியேற்பார் என அவர் தெரிவித்துள்ளார். ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.