தமிழக செய்திகள்

வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் உயிரிழப்பு - வீரபாண்டியன் இரங்கல்

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“வியட்நாமில் உள்ள தீவிற்கு சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோது படகு கவிழ்ந்ததில் தமிழர்கள் 10 பேர் உள்பட இந்திய சுற்றுலா பயணிகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த மன வேதனையையும், துயரத்தையும் தருகிறது.

இந்தப் படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலியை செலுத்துகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.