டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள ஐ.ஐ.டி. கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் அவர் பேசியதாவது;-
“மாணவர்களாகிய நீங்கள், மாற்றத்தை உருவாக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து வருவது உங்களுக்கு ஒரு நல்வாய்ப்பாகும். உங்கள் எதிர்காலம் மிகுந்த நம்பிக்கைக்குரியதாக அமைந்துள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன; நாடு ஒரு சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்கிறது.
மாணவர்கள் தங்கள் வாழ்வில் பகவான் ராமரைப் போல் துணிச்சலுடன் திகழ வேண்டும். பகவான் ராமரின் துணிச்சலான குணத்தை கருத்தில் கொண்டே, அரக்கர்களை அழிப்பதற்காக முனிவர் விஸ்வாமித்திரர் அவரை தேர்ந்தெடுத்தார்.
2047-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை 'அம்ரித் கால்' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ள நிலையில், இது உண்மையிலேயே ஒரு அற்புதமான காலம் ஆகும். இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) என்பது, 4.015 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. இது அடுத்த 20 ஆண்டுகளில் 38 டிரில்லியன் டாலராக(ரூ.3.65 லட்சம் கோடியாக) உயரும்.
நான் ஆரம்பக் காலங்களில் சிக்கிமில் பணியாற்றியபோது, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான மூன்று மந்திரங்களை ஒரு பழங்குடியினத்தவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். முதல் மந்திரம் - நாம் தற்போது எங்கே இருக்கிறோம் என்பதை அறிவது; இரண்டாவது - நாம் எங்கு செல்ல வேண்டும் என்பதை அறிவது; மூன்றாவது - அங்கு சென்று திரும்புவதற்கான பாதையை அறிவது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.